சிறிலங்காவில் 2 பில்லியன் டொலர் முதலிடுகிறது இந்தியா
சம்பூர் அனல் மின் திட்டம் நிறுத்தப்பட்டதால், சிறிலங்காவில் இந்தியாவின் முதலீடுகள் பாதிக்கப்படாது என்றும், அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் சிறிலங்காவில் 2 பில்லியன் டொலர் முதலீடுகளை இந்தியா மேற்கொள்ளும் என்றும் இந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
”இந்த முதலீடுகளில், திருகோணமலை எண்ணெய்க் குதங்களின் அபிவிருத்தி, மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களும் உள்ளடங்கும்.
இந்தியாவின் உதவியுடன் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் திட்டம் அண்மையில் கைவிடப்பட்டமையானது, சிறிலங்காவில் இந்தியாவின் முதலீடுகளைப் பாதிக்காது.
அனைத்துலக உடன்பாடுகளை மேற்கொள்ளும் போது. தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய தேவையை நாம் எப்போதும் மதிக்கிறோம்.
கொச்சியில் இருந்து இயற்கை எரிவாயுவைப் பெறும் வகையில், அனல் மின் திட்டத்தை இயற்கை எரிவாயு மின் திட்டமாக மாற்றுவது குறித்து நாம் கவனம் செலுத்துவோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.