லசந்தவின் உடல் தோண்டியெடுப்பு – படம்பிடித்த ஆளில்லா விமானத்தை தேடி வேட்டை
படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் உடல் மேலதிக பரிசோதனைகளுக்காக நேற்று மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, பொரளை நீதிவான் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பொரளையில் உள்ள இடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த உடல் நேற்றுக்காலை தோண்டியெடுக்கப்பட்டது.
இதையடுத்து, சடல எச்சங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்காக சட்டமருத்துவ அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லசந்த விக்கிரமதுங்கவின் உடல் தோண்டியெடுக்கப்பட்ட போது, இடுகாட்டுக்குள் ஊடகவியலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
பலத்த பாதுகாப்புக்கு நடுவே, லசந்த விக்கிரமதுங்கவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டதை, மர்மமான சிறிய ஆளில்லா விமானம் ஒன்று படம் பிடித்தது.
இதனால் சிறிலங்கா காவல்துறையினர் பதற்றமடைந்து, அந்த ஆளில்லா விமானத்தை தரையிறக்க முயன்றனர்.
ஆனால் சிறிலங்கா காவல்துறையினரின் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததுடன், ஆளில்லா விமானம் எங்கோ மர்மமான முறையில் மறைந்து போனது.
இதையடுத்து, அந்த ஆளில்லா விமானத்தையும் அதன் உரிமையாளரையும், கண்டறிவதற்கு துறைசார் வல்லுனர்களின் உதவியை சிறிலங்கா காவல்துறை நாடியுள்ளது.