புதிய அரசியலமைப்பை வரையும் பணிகள் ஆரம்பம்- உறுதிப்படுத்தினார் ஹரிணி
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் உறுதியளித்தபடி, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை நிச்சயமாக ஒழிக்கப்படும் என சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறை புதிய அரசியலமைப்பின் ஊடாகவே ஒழிக்கப்படும்.
புதிய அரசியலமைப்பினால் தான் இதனை செய்ய முடியும் என்பதால், அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக, முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட குழு அறிக்கைகள் மற்றும் ஏனைய முன்மொழிவுகள் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான வரைவு பற்றிய ‘கருத்துரு ஆவணம்’ விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் .
தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.
முறையான அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாகவே இது சாத்தியமாகும் என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.
