தூதரகப் பணியாளருக்குப் பிணை – வரவேற்கிறது சுவிஸ்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரான கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதை சுவிஸ் வெளிவிவகாரத் திணைக்களம் வரவேற்றுள்ளது.
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும், சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரான கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் அரசாங்கத்துக்கு எதிராக பொய்யான சாட்சியம் அளித்தார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் அவரை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.
இது குறித்து சுவிஸ் வெளிவிவகாரத் திணைக்களம் தமது அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில்,“ கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகப் பணியாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதை சுவிஸ் வெளிவிவகாரத் திணைக்களம் வரவேற்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.