சிறிலங்காவில் இராணுவத் தளம் அமைக்கப் போகிறதாம் அமெரிக்கா – திஸ்ஸ விதாரண கூறுகிறார்
சிறிலங்காவில் இராணுவத் தளங்களை அமைக்க அமெரிக்க எண்ணம் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று டியூ குணசேகர, உதய கம்மன்பில ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“தெற்காசியாவுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் மூத்த இராணுவ அதிகாரியும், சிறிலங்காவுக்கான தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளவரும் பகிரங்கமாக, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்தில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது அவர்கள் சிறிலங்காவில் இராணுவத் தளம் ஒன்றை அமைக்க விரும்புகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
இதுதொடர்பாக அமெரிக்காவுடன் ஐதேக உடன்பாடு செய்துள்ளது போலத் தெரிகிறது.
ஏனென்றால், கடந்த தேர்தலுக்குப் பின்னர் வெளியாகும் அண்மைய அறிக்கைகள், ஐதேகவின் வெற்றியை எதிர்பார்ப்பதாக உள்ளன.
2002இல் இரகசிய உடன்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மீண்டும் ஐதேக பதவிக்கு வந்தால் அவை செயலுக்கு வரும்.
அதேவேளை தேர்தல் அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஸ்டி கோரிக்கை, தெற்கில் இனவாத சக்திகளுக்கு ஊக்கமளிக்கும்.
இந்த முக்கியமான கட்டத்தில் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது.
நாம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போது, தெற்கிலுள்ள இனவாத சக்திகளையே இது ஊக்குவிக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.