சீனாவுடன் வெளிப்படையான உறவை வலுப்படுத்த சிறிலங்கா ஆவல்
சீனாவுடனான உறவுகளை பரஸ்பர நன்மையளிக்கும் வகையிலும், வெளிப்படையான முறையிலும், வலுப்படுத்துவதற்கு சிறிலங்கா ஆவலுடன் காத்திருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஷங்க்ரி லா விடுதியில் கடந்த பெப்ரவரி 9ஆம் நாள் நடைபெற்ற சீன சந்திர புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனா, சிறிலங்காவின் மதிப்புமிக்க மற்றும் நம்பகமான நண்பனாக இருந்து வருகிறது. எமது வரலாற்றின் முக்கியமான தருணங்களில் ஆதரவை வழங்கி வருகிறது.
எமது வளர்ச்சி முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது.
அண்மைய பேரிடரின் போது, சீன மக்கள் குடியரசு சிறிலங்காவுக்கு அளித்த உறுதியான ஆதரவிற்கு சிறிலங்கா நன்றி தெரிவிக்கிறது,
சிறிலங்கா அதன் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சியின் பாதையில் முன்னேறிச் செல்லும்போது, சீனாவுடனான எமது உறவுகளை பரஸ்பர நன்மை பயக்கும், வெளிப்படையான மற்றும் இருநாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப மேலும் வலுப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
சிறிலங்காவுக்கும் சீனாவிற்கும் இடையிலான மொழி, கல்வி, சுற்றுலா மற்றும் கலாசார ஒத்துழைப்பில் வளர்ந்து வரும் ஆர்வம் எமது சமூகங்களுக்கு இடையிலான ஆழமான உறவுகள் மற்றும் புரிதலுக்கு ஒரு சான்றாகும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார்.
