நாளை வருகிறார் ராஜ்நாத் சிங்- இந்திய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்ரெம்பர் 8 முதல் 10ஆம் நாள் வரை சிறிலங்காவில் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது, ராஜ்நாத் சிங் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சிறிலங்கா தலைவர்களுடன் கலந்தாலோசனை நடத்தவும், கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அவர், இந்திய பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவிற்குத் தலைமை தாங்குவார்.
இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை, குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு மற்றும் தற்காப்புத் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுடனான தனது உறவு, நீண்டகால நாகரிகப் பிணைப்புகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு, தற்காப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒத்துழைப்பு, அத்துடன் வலுவான மக்கள்-மக்களுக்கு இடையேயான தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறியுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தங்களது கடல்சார் மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான இரு நாடுகளின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியில் இந்த வருகை அமைந்துள்ளது.
