நினைவு பசுமையாக இருக்கும்போதே நீதி வழங்கப்பட வேண்டும்- என்கிறார் அனுர
நீதி பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் அது விரைவாக வழங்கப்பட வேண்டும், என, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள புலத்சிங்கள மற்றும் பேருவளையில் நேற்று நடைபெற்ற, “எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம்” என்ற கருப்பொருளிலான தேசிய பேரணித் தொடரின் தொடக்க விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள 22வது திருத்தச் சட்டமூலத்திற்கு அரசியல் எதிரிகள் அல்லது வெளி அமைப்புகளின் எதிர்ப்பு இருந்தாலும், பொதுமக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் மாற்றப்படாது.
சவால்கள் அல்லது பாதகமான விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், பொதுமக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகளில் எனது அரசாங்கம் உறுதியாக நிற்கும்.
ஒரு குற்றம் இழைக்கப்பட்டுவிட்டால், பல ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை பெறுவதில் எந்தப் பயனும் இல்லை; சம்பவம் நினைவில் பசுமையாக இருக்கும்போதே நீதி வழங்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம், குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தவுடன், அரசாங்கம் அதனை நாடாளுமன்றத்தில் தாமதமின்றி தாக்கல் செய்து நிறைவேற்றும்.
அரசாங்கம் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில் செயற்படுவதான சொல்லாடல்கள் அரசியல் தொலைநோக்குப் பார்வை இல்லாத குழுக்களால் கூறப்படுகின்றன.
அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் திட்டமிட்டபடி கண்டிப்பாக நடைபெறும்.
நிலுவையில் உள்ள சட்டரீதியான தடைகள் நீக்கப்பட்டு, தேர்தல் முறை குறித்து நாடாளுமன்றம் ஒருமித்த கருத்தை எட்டியவுடன் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படும்.
அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அரசியல் சூழ்ச்சிகளையோ அல்லது குறுக்குவழிகளையோ கையாளும் எண்ணம் எனக்கு இல்லை.“
நிர்வாகத்தின் நம்பிக்கை முழுவதுமாக பொதுமக்களிடமே உள்ளது.
கடுமையான ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதிலும், நிலையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதிலும் அரசாங்கம் உறுதியாக நிற்கிறது.
அதிகாரப்பூர்வமற்ற வழிகள் மூலம் வெளியேறும் நிதிப் பரிமாற்றங்களே முதன்மை இலக்கு.
சட்டவிரோத மூலதன வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும், அரசாங்க வரி வசூலைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த மோசடி வழக்குகளை அரசியல் தலையீடு இன்றித் தொடர்வதற்காக, குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு போன்ற தொடர்புடைய அரசாங்கப் பங்குதாரர்களுக்கு நிறுவன ரீதியான ஆதரவு வழங்கப்பட்டுள்ளன.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
