மேலும்

தமிழ் அரசியல்வாதியை கொல்லச் சதி? – வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு

வடக்கில் உள்ள முக்கிய தமிழ் அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகளின் ஆறு முக்கிய முன்னாள் போராளிகள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வாரம் இராணுவப் புலனாய்வுப் பிரிவும், பயங்கரவாத விசாரணைத் திணைக்களமும், இணைந்து வடக்கில் வீடு ஒன்றில் நடத்திய தேடுதலில்  சில நவீன தொடர்பாடல் கருவிகளும், ஒருதொகை சக்திவாய்ந்த வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

தற்போது ஜேர்மனி கடவுச்சீட்டை கொண்டுள்ள முன்னாள் புலி போராளி ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்கள், வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

மேற்குலக நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் புலிகளின் முன்னாள் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்தக் குழுவுக்கு நிதி உதவி வழங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த உறுப்பினர்கள் உயர்சக்தி வெடிபொருட்களைப் பயன்படுத்துவது குறித்து சிறப்புப் பயிற்சியைப் பெற்றுள்ளனர் என்றும், அதற்கு  மலேசியா மற்றும் இந்தியாவில் உள்ள முன்னாள் புலிகள் தலைவர்கள் நிதி மற்றும் பிற உதவிகளை வழங்கியுள்ளனர் என்றும் அதிகாரி  ஒருவர் கூறியுள்ளார்.

அண்மைய பயங்கரவாத வலையமைப்பைக் கண்டுபிடிப்பதற்காக சிறிலங்காவின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் உதவியை நாடவுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் நேற்று கொழும்பு ஆங்கில நாளிதழிடம் உறுதிப்படுத்தியுள்ளன.

பிந்திய நிலைமைகளை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம், குறிப்பாக வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *