வேலைவாய்ப்பு நேர்காணல் குழுவில் இராணுவ அதிகாரிகள்
சிறிலங்கா அரசாங்கத்தின் ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்த குழுவில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தமை குறித்து, கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு அளிக்கும், தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய, வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்தவர்களுக்கு பிரதேச செயலகங்களில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த நேர்முகத் தேர்வுகளில், அரசாங்க நிர்வாக சேவை அதிகாரிகளுடன், இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
நேர்காணல் நடத்திய, சிறிலங்கா இராணுவ அதிகாரிகளிடம், விண்ணப்பதாரிகளின் விபரங்கள் அடங்கிய தனியான கோப்புகள் இருந்தன.
இராணுவ அதிகாரிகள், விண்ணப்பதாரிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் கல்வித் தகைமையுடன், குடும்பச் சூழ்நிலை குறித்தும், ஆராயவுள்ளனர். அதற்கமைய, வசதி குறைந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத்தினரின் பொருளாதார சூழ்நிலை குறித்து கிராம அதிகாரியின் சான்றிதழ் இருக்கும் நிலையில் இராணுவ அதிகாரிகளைக் கொண்டு சரிபார்ப்பது குறித்து விண்ணப்பதாரிகள் கவலை எழுப்பியுள்ளனர்.