நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்காக, சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றம் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, தற்போதைய நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நான்கரை ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு கிடைத்துள்ளது.
இதற்கமைய, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால், நாளை நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களைக் கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான மேற்பார்வை அரசாங்கம் பொறுப்பில் இருக்கும். இராஜாங்க, மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியிழப்பார்கள்.
நாடாளுமன்றம் கலைக்கப்படும் அறிவிப்புடன், புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளையும் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச அரசிதழில் வெளியிடுவார்.
சிறிலங்காவின் சட்டங்களின் படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 55 தொடக்கம் 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், ஏப்ரல் 25 அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் 12 தொடக்கம் 16 வரை, வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இடம்பெறும் என்றும் தெரியவருகிறது.