மேலும்

42 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் – தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், 42 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை, பொது நிர்வாக அமைச்சு செயற்படுத்துவதற்கு, சிறிலங்காவின் தேசிய தேர்தல்கள் ஆணையம் பச்சைக்கொடி காண்பித்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள வேலைவாய்ப்பு திட்டங்கள், நேர்காணல்கள், மற்றும் நியமனங்கள் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணையம்  விளக்கங்களை கோரிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களை விரைவாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அஞ்சல் சேவை வசதிகள் கிடைக்கும் என்று நம்புவதாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.

“பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், 42 ஆயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இவர்களில், 15 ஆயிரம் பேருக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏனையவர்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது” என்றும், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெற்றியாராச்சி கூறியுள்ளார்.

எனினும், தேர்தல் பரப்புரைக் காலத்தில் தமது அரசாங்கம் வேலைவாய்ப்பு நியமனங்களை வழங்க தேர்தல்கள் ஆணையம் அனுமதிக்கவில்லை என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த திட்டத்தை அனுமதிக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்தைக் கோரியுள்ளதாகவும் தேக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேர்தல் முடியும் வரை நியமனங்களை வழங்கும் திட்டம் இடைநிறுத்தப்பட வேண்டும் என்று ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *