ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 14ஆம், 15ஆம் நாட்களில் சீனாவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
முன்னதாக ஜனவரி மாதம் முதல் வாரம், சிறிலங்கா அதிபர் பயணத்தை மேற்கொள்வதற்கு பீஜிங் பரிந்துரைத்திருந்தது என்றும், பின்னர் மீளாய்வு செய்யப்பட்டு, 14, 15ஆம் நாள்களில் பயணத்தை மேற்கொள்வதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நொவம்பர் மாதம் சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற பின்னர் கோத்தாபய ராஜபக்ச மேற்கொள்ளவுள்ள இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
அவர் நொவம்பர் 28 தொடக்கம் 30 வரை இந்தியாவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.