கொழும்பு வந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சிறப்பு விமானத்தில் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
எதிர்வரும் 10 நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தக் காலகட்டத்தில், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து சிறிலங்காவின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.



