22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்கு
22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் சரியாக விசாரிக்கத் தவறியதால், இரண்டு மனுதாரர்களின் உரிமைகள் மீறப்பட்டதாக அறிவிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் துலார குணதிலக மற்றும் ஓய்வுபெற்ற சிறிலங்கா விமானப்படை அதிகாரி சாந்த ஜெயதிலக ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
துலார குணதிலக இதற்கு முன்னர் 22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்ததாகவும், ஆனால் அந்த மனு திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை என்றும், மனுதாரர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தவறின் விளைவாகத் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
மேலும், இந்த மனு விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, 22வது திருத்தச் சட்டமூலம் மீதான நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்குத் தெரிவிப்பதைத் தடுக்கும் ஒரு இடைக்கால உத்தரவையும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
