அம்பிகா, சசிகலாவை யாழ்ப்பாணத்தில் களமிறக்கும் தமிழ் அரசு
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பெண் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் நேற்று மாலை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் குறித்து பெரும்பாலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில், இரண்டு பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியான சசிகலா ரவிராஜ், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அம்பிகா சற்குணநாதன் ஆகிய இருவருமே பெண் வேட்பாளர்களாக யாழ். மாவட்டத்தில் நிறுத்தப்படவுள்ளன.
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையில் இருந்து விலக சிறிலங்கா அரசாங்கம் எடுத்த முடிவை அடுத்து, அம்பிகா சற்குணநாதன், மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் ஈ.சரவணபவன், ஆகியோருடன் புதிய வேட்பாளராக வேதநாயகன் தபேந்திரனும், இரண்டு பெண் வேட்பாளர்களான ரவிராஜ் சசிகலா, அம்பிகா சற்குணநாதன் ஆகியோரும் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியில் நிறுத்தப்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.