சஜித் கூட்டணி உருவாக்கும் நிகழ்வை புறக்கணிக்கிறார் ரணில்
சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கொழும்பில் நடைபெறவுள்ள சமாஜி ஜன பலவேகய கூட்டணியின் ஆரம்ப நிகழ்வை, ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க புறக்கணிக்கவுள்ளார்.
சமாஜி ஜன பலவேகய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், மற்றும் அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், கூட்டணி தொடர்பான நிலுவையில் உள்ள பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும், எனவே கூட்டணியை உருவாக்கும் நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என்றும் நேற்றிரவு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐதேகவுடனான பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, சஜித் பிரேமதாச தலைமையிலான சமாஜி ஜன பலவேகய என்ற புதிய கூட்டணியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டணியின் சின்னம் குறித்து இன்று அறிவிக்கப்படமாட்டாது என்றும், எவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம் என்றும் ஐதேக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.