இன்று வெளியாகிறது தேர்தல் ஆணையத்தின் அரசிதழ்
சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேசிய தேர்தல்கள் ஆணையத்தின் சிறப்பு அரசிதழ் அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.
பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் நாள் நடைபெறும் எனவும், மார்ச் 12 தொடக்கம் 19 நண்பகல் 12 மணி வரை தெரிவத்தாட்சி அதிகாரிகளால், வேட்புமனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அரசிதழ் அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தேசிய தேர்தல்கள் ஆணையமே, அடுத்த கட்டமாக தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்கும்.
இதன்படி, தேர்தல்கள் ஆணையத்தினால் இன்று சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
“இந்த அரசிதழ் அறிவிப்பில், வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் மாவட்ட செயலகங்கள், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் பெயர்கள், 22 தேர்தல் மாவட்டங்களிலும் வேட்புமனுக்களின் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை, வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய கட்டுப்பணம், பல்வேறு காரணங்களால் வேறு வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கான விண்ணப்பம் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
பொதுத் தேர்தலை முறைப்படி நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணையம் மேற்கொண்டிருக்கிறது” என்றும் அவர் கூறினார்.