செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று ஒரே நாளில் 13 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து, நேற்று மட்டும் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 17ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன.
இதன்போது 13 எலும்புக்கூட்டுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட, மூன்று சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 11 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.
இதையடுத்து. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரையில் நடைபெற்ற அகழ்வுப் பணிகளின் போது, அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது.
அவற்றுள் 290 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, எலும்புக்கூடு ஒன்றுடன் தகர வடிவிலான பொருள் ஒன்றும் மீட்கப்பட்டு, சான்றுப் பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெறாது எனவும், நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படம்- பிரபாகரன் டிலக்சன் (முகநூல்!

