இத்தாலியில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு
இத்தாலியில் இருந்து சிறிலங்காவுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படவுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் இத்தாலியிலும் தீவிரமாகப் பரவி வருகின்ற நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
முன்னதாக, கொவிட்-19 ஆரம்பத்தில் பரவ ஆரம்பித்த சீனா மற்றும் தென்கொரியாவில் இருந்து சிறிலங்கா வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.
தற்போது, இத்தாலியில் இருந்து திரும்புபவர்களும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் மருத்துவ கலாநிதி சுதத் சமரவீர,
“இத்தாலியில் இருந்து வருபவர்கள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து பொது சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இத்தாலியில் இருந்து திரும்பியவர்களை இரண்டு வாரங்களில் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
ஏதாவது அறிகுறிகள் உள்ளனவா என்று பொது சுகாதார அதிகாரிகள் அவர்களை தொடர்ச்சியாக கண்காணிப்பார்கள்.” என்றும் அவர் தெரிவித்தார்.
சிறிலங்காவில் கொவிட் -19 தொற்றுக்கு இலக்கானவர்கள் என்ற சந்தேகத்தில், இதுவரை 18 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் வெளிநாட்டவர்களாவர்.
எனினும், எவருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை.