சிறிலங்காவில் கொரோனா கண்காணிப்பில் 16 பேர்
கொரோனா வைரஸ் எனப்படும், கொவிட் -19 தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறிலங்காவில் 16 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவின் பிந்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 5 பேர் தொற்றுநோயியல் தேசிய நிறுவகத்திலும், நான்கு பேர் நீர்கொழும்பு மருத்துவமனையிலும், மூவர் குருநாகல மருத்துவமனையிலும், இருவர் இரத்தினபுரி மருத்துவமனையிலும், ஒருவர் கராப்பிட்டிய மருத்துவமனையிலும், ஒருவர் லேடி றிஜ்வே மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சிறிலங்காவில் பொதுமக்கள் முகமூடிகளை அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் காய்ச்சல், பருவகால காய்ச்சல் போன்றவை இருப்பவர்களும், சிறப்பு சுகாதார நிலைமைகள் மற்றும் குறிப்பிட்ட நோய்கள் காரணமாக கணிசமாக குறைந்தளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களும் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகமூடி அணிவது நல்லது என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
உலகின் பல நாடுகளில் கொவிட்-19 நோய் பரவி வருகின்ற நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா வருபவர்கள் விமான நிலையங்களில் தீவிரமான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.