மேலும்

நேட்டோவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கோரியது சிறிலங்கா

நேட்டோ அமைப்புடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா கவனம் செலுத்தியுள்ளது.

பாதுகாப்புத் தளபதிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, சிறிலங்கா பாதுகாப்பு  செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, அதிகாரபூர்வ பயணமாக கனடா சென்றுள்ளார்.

அவர் விக்டோரியாவில் நடைபெற்ற பாதுகாப்பு தளபதிகள் மாநாட்டின் ஒரு பகுதியாக,  நேட்டோ இராணுவக் குழுவின் தலைவர் அட்மிரல் கியூசெப்பே காவோ ட்ராகோனுடன் (Admiral Giuseppe Cavo Dragone) இருதரப்புப் பேச்சுக்களை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, ​​இராணுவ தளவாடங்களை நவீனமயமாக்குதல், மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பெற்றுக் கொள்ளுதல், இணையவழித் திறன்கள் மற்றும் கண்காணிப்புத் தளங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட சிறிலங்காவின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து, சிறிலங்கா பாதுகாப்பு செயலர்  கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இராணுவப் பணியாளர்களைப் பரிமாறிக்கொள்ளுதல், விரிவுபடுத்தப்பட்ட கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்கள், நிபுணத்துவம் மற்றும் தகவல்களை அதிகளவில் பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் என்பதும் சாத்தியமான ஒத்துழைப்புக்கான ஒரு துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்போது, நிபுணத்துவப் பரிமாற்றம் மற்றும் பேரிடர் மீட்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) திறம்படப் பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் தொடர்ச்சியான உரையாடல், தகவல் பகிர்வு மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, சிறிலங்காவுடனான தனது ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்துமாறு நேட்டோவிற்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சம்பத் துயகொந்த அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *